தமிழகம் முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தம்

சென்னை:, நவ.14 மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று ஈடுபடுகின்றனர்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் செந்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, நவ.14-ம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. அவசர சிகிச்சையை தவிர்த்து அனைத்து விதமான மருத்துவ சேவைகளையும் நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசு
டாக்டர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதையடுத்து புறநோயாளிகள் பிரிவு, அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள், பிற சிகிச்சைகள், மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகியவை தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறுத்தப்படும்.
மருத்துவர் மீதான கடுமையான தாக்குதலை கண்டிக்கவும், குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்கவும், வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெறும்.முன்னதாக, அரசு மருத்துவர் சங்கங்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார். அப்போது, வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தாலும், அதற்கான ஆணைகளை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.இதனிடையே, இந்திய மருத்துவ சங்கம் உள்பட பல்வேறு மருத்துவர் சங்கங்களும் ஒரு அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.