
புதுடெல்லி, டிச. 13- திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் தமிழக அரசை பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் நேற்று விமர்சனம் செய்தார். சனாதன விரோதப் போக்கை தமிழக அரசு கடைப்பிடிப்பதாக அவர் சாடினார். மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக சர்ச்சை நிலவி வருகிறது. இந்த விவகாரத்தை மக்களவையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் நேற்று எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவின் ஒரு மாநிலம் சனாதன விரோத நிலைப்பாட்டின் அடையாளமாக மாறியுள்ள ஒரு முக்கியப் பிரச்சினையை நான் இங்கு எழுப்ப விரும்புகிறேன். அம்மாநில அமைச்சர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக பேசி வருகின்றனர். கோயிலுக்குள் நுழைய நீதிமன்ற தலையீட்டை நாட வேண்டிய கட்டாயம் பக்தர்களுக்கு ஏற்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உத்தரவை அதிகாரிகள் வேண்டுமென்றே புறக்கணித்ததாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சம்பவத்தின் போது பக்தர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்துக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இந்துக்கள் ஏன் தடுக்கப்படுகிறார்கள்? இவ்வாறு அனுராக் தாக்குர் பேசினார். திரிணமூல் எம்.பி. மீது புகார்: மக்களவையில் இ-சிகரெட் புகைத்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் நேற்று எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். அவர் தனது புகாரில், ‘‘திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் (சுகதா ராய்) அவையில் வெளிப்படையாக மின்னணு சிகரெட்டைப் பயன்படுத்தியுள்ளார். இது நாடாளுமன்ற ஒழுக்கத்தை மீறுவது மட்டுமின்றி சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறி உள்ளார்.
















