
புதுடெல்லி: அக். 16-
தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழக மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வழக்கறிஞர் டி. ஹரீஷ் குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிப்பது மற்றும் நீக்குவதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டத் திருத்த மசோதா கடந்த ஏப்ரல் 29-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழக அரசு மே 5-ம் தேதி அனுப்பிவைத்தது.
மாநில அரசின் ஆலோசனையை மதிக்காமல், யுஜிசி விதிகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு இந்த மசோதாவை கடந்த ஜூலை 14-ம் தேதி ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். தொழில்நுட்ப கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக்கழகங்கள் ஆகியவை பொதுப் பட்டியலில் உள்ளதால், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது.
தவிர, அந்த பல்கலைக்கழகத்தின் 2004-ம் ஆண்டுசட்டத்துக்கு குடியரசுத் தலைவர் கடந்த 2005 ஆகஸ்ட் 4-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார். தற்போதைய சட்டத் திருத்த மசோதாவும் மத்திய அரசின் சட்டத்துடன் முரண்படவில்லை.
இதுதொடர்பாக மாநில அமைச்சரவையின் ஆலோசனையை அறிந்த பிறகும், யுஜிசி விதிகளுக்கு முரணாக உள்ளது என ஆளுநர் கருதியுள்ளார். இந்த விவகாரத்துக்கு யுஜிசி விதிகள் பொருந்தாது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளால் முடிவான சட்டத்தை மறந்துவிட்டு, தமிழக அரசின் உண்மையான முயற்சிகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். எனவே, மேற்கண்ட சட்டத் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததும், இதன் மீதான மேற்படி நடவடிக்கைகளையும் சட்டத்துக்கு முரணானது என அறிவிக்க வேண்டும். அந்த மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்ப யுஜிசிக்கு உத்தரவிட வேண்டும். அமைச்சரவையின் ஆலோசனைப்படி மசோதாவை பரீசிலிக்க ஆளுநருக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.















