சென்னை: டிசம்பர் 3-
திமுகவிடம் 40 தொகுதிகளில் இருந்து பேச்சுவார்த்தை தொடங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் தலைமை அமைத்துள்ள 5 பேர் கொண்ட குழுவினர் இன்று திமுகவுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்குகின்றனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ளது. தேர்தலை சந்திக்க கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள், எத்தனை தொகுதிகள் கேட்பது, என்னென்ன தொகுதிகள் கேட்பது என்பது குறித்து அவர்களுக்குள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, கடந்த முறையைவிட இந்த முறை அதிக தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இதற்கிடையில், தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்த காங்கிரஸ் தலைமை 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
இந்த குழுவில் காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தை மற்றும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்பாக, நேற்று தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், மூத்த தலைவர்களுடன் குழுவினர் ஆலோசனை நடத்தினர். அப்போது, கடந்த முறையைவிட எத்தனை தொகுதிகள் கூடுதலாக கேட்பது, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்னென்ன போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளை பெற்று, அதில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை திமுகவிடம் 40 தொகுதிகளை கேட்டு காங்கிரஸ் பேச்சுவார்த்தையை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.















