திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா? இன்றுடன் கெடு முடிகிறது

சென்னை: மார்ச் 3-
திமுக- காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. மார்ச் 3 ஆம் தேதியான இன்றைக்குள் முடிவெடுக்க காங்கிரஸ் கட்சிக்கு திமுக கெடு விதித்துள்ளது. சட்டமன்றத்தில் 25 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 5 அன்று முடிவடைகிறது. காங்கிரஸ் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், திமுக தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கும் என மூத்த திமுக தலைவர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட அதே 25 சட்டமன்ற, ஒரு மாநிலங்களவைத் தொகுதியை காங்கிரஸுக்கு திமுக வழங்க முன்வந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் தரப்பு 35-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளையும் (முதலில் 41, பிறகு 39 கோரப்பட்டது) இரண்டு மாநிலங்களவைத் தொகுதிகளையும் கேட்டு வருகிறது. மார்ச் 1 அன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “திமுகவின் சலுகை எங்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாதது” என்றார். முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நேர்மறையாக இருந்ததாக சோடங்கர் குறிப்பிட்டாலும், காங்கிரஸ் கோரிக்கைகளை திமுக ஏற்கும் என நம்பினார். “அப்போதுதான் எங்களால் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்த முடியும்,” என்றார். இந்த முரண்பாடுகள் பேச்சுவார்த்தையை சிக்கலாக்கியுள்ளன.
25 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸுக்கு ஒதுக்க வாய்ப்பில்லை என திமுக தலைமை உறுதியாக உள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மீது காங்கிரஸ் காட்டும் பரிவு திமுகவை உசுப்பேற்றியுள்ளது. இது தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பதற்றத்தை நீடிக்கச் செய்கிறது.
இது குறித்து சோடங்கர் கூறுகையில், தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய கட்சி. அதை குறைத்து மதிப்பிடக் கூடாது. அவர்கள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுகிறார்கள். காங்கிரஸின் பலத்தையும், ராகுலின் முக்கியத்துவத்தையும் தமிழ்நாட்டில் அவர்கள் அங்கீகரிக்கிறார்கள் என்றார். ஆனாலும், தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து திமுக கவலைப்படவில்லை என மூத்த திமுக தலைவர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். திமுக ஏற்கெனவே வலுவான கூட்டணி அமைத்துவிட்டதாகவும், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.