Home மாவட்டங்கள் பெங்களூர் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது

சென்னை: ஜூலை 3-
முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்ட சில நிமிடங்களில் தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி ஆத்தூர் பேரூராட்சி அருகே மக்கள் குறை கேட்டுக் கொண்டிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அப்போது திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தான் தனது காரில் வருகிறேன் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார் ஆனால் அதை போலீசார் கேட்கவில்லை தங்கள் வாகனத்தில் அழைத்து சென்றனர். அப்போது திமுக தொண்டர்கள் போலீசருக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திருச்​செந்​தூர் அருகே ஆத்​தூர் பகு​தி​யில் ஜூன் 20-ம் தேதி முன்னாள் முதல்​வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திமுக சார்​பில் பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது.
இதில் பேசிய, திருச்​செந்​தூர் தொகுதி திமுக எம்​எல்​ஏ ​அனிதா ராதாகிருஷ்ணன், முதல்​வர் விஜய் குறித்து ஒரு​மை​யிலும், அவதூறாக​வும் பேசி​ய​தாக, தவெக நகரச் செய​லா​ளர் செல்​வம், ஆத்​தூர் காவல் நிலை​யத்​தில் புகாரளித்​தார்.
இந்த புகாரின் அடிப்படையில், அனிதா ​ரா​தாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீ​ஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், இந்த பேச்சுக்கு அவதூறு வழக்கு தான் தாக்கல் செய்திருக்க வேண்டுமே தவிர, போலீஸார் வழக்குப்பதிவு செய்ய முடியாது. அதனால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில், ஏழு முறை எம்எல்ஏவாக இருந்த மனுதாரர் கட்டுப்பாட்டுடன் பேசியிருக்க வேண்டும். இந்த வழக்கை பதிவு செய்திருக்காவிட்டால் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருக்கும். அதனால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது. புகார்தாரர் தரப்பிலும் முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “1967-ம் ஆண்டுக்கு பின் தமிழகத்தை திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தான் ஆட்சி செய்திருக்கிறார்கள். நாம் தான் வாக்களித்து தேர்ந்தெடுத்தோம்.
மனுதாரர் சாதாரண குடிமகன் அல்ல; எம்எல்ஏவாக உள்ளவர். அவர் முதல்வர் பதவிக்கான மரியாதை கொடுக்க வேண்டாமா. ஏன் இதுபோன்ற மொழியில் ஒரு எம்எல்ஏ பேச வேண்டும்,” எனக் கேள்வி எழுப்பி, அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்