
புதுடெல்லி: மே 29 –
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திருடப்படும் செல்போன்கள், கண்டறியப்பட்டு வெற்றிகரமாக உரியவர்களிடம் சேர்க்கப்படும் தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இதற்காக போலீஸார் உதவியுடன் மத்திய அரசு நடத்தும் இணையதளம் உதவி வருகிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இதில் பலர் தங்களது செல்போன்களை தவறவிடுகின்றனர். மேலும் சிலர், திருடர்களிடம் தங்களது செல்போன்களை பறிகொடுக்கின்றனர். அதேநேரத்தில் திருடப்படும் செல்போன்கள் குறித்து போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார்கள் குறைவாகவே உள்ளன. இருந்தபோதும் புகார் தரப்பட்ட செல்போன் திருட்டுகள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து அவற்றைக் கண்டறிந்து வருகின்றனர்.
அண்மையில் உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத் போலீஸ் நிலையத்துக்கு 70-க்கும் மேற்பட்ட செல்போன் பார்சல்கள் வந்துள்ளன. இவை அனைத்தும் திருடப்பட்டு வெவ்வேறு மாநிலங்களில் உள்ள கள்ளச்சந்தைகளில் விற்கப்பட்டவை. இவ்வாறு கள்ளச்சந்தைகளில் விற்கப்படும் செல்போன்களை தெரியாமல் வாங்கும் நபர்கள், அதன் உண்மைத்தன்மையை அறிந்து அவற்றை போலீஸார் உதவியுடன், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு திருப்பி அனுப்பி வருகின்றனர்.
6 மாதங்களுக்கு முன் காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர், மிகக்குறைந்த விலையில் ஒரு கடையில் செல்போனை வாங்கியுள்ளார். அப்போதுதான் அந்த செல்போன் உ.பி. மாநிலம் காஸியாபாத்திலுள்ள ரஞ்சித் ஜா என்ற சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. ரஞ்சித் ஜா அந்த செல்போனை கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி தவறவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.இதுகுறித்து ரஞ்சித் ஜா கூறும்போது, “நான் ஒரு நேர்முகத் தேர்வுக்குத் தயாராகிவிட்டு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் சென்றேன். அப்போது போன் பேசிவிட்டு போனை தவறுதலாக கையிலிருந்து நழுவ விட்டுவிட்டேன். பின்னர் செல்போனை தவறவிட்டதை அறிந்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். இப்போது எனது போன் திரும்பக் கிடைத்துள்ளது’’ என்றார்.