
புதுடெல்லி: ஜூன் 25-
டில்லியில் பிளாஸ்டிக் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகினர்.
இது பற்றிய விவரம் வருமாறு: வடமேற்கு டில்லியில் ரிதலா மெட்ரோ நிலையம் அருகே பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மளமளவென இந்த தீ, கட்டடத்தின் மற்ற தளங்களுக்கு வேகமாக பரவியது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயை அணைக்கும் பணியில் அவர்கள் வேகமாக இறங்கினர்.
ஆனால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததோடு, மற்ற தளங்களுக்கும் பரவியதால் கட்டுப்படுத்த முடியாமல் வீரர்கள் திணறினர். தீ விபத்தில் அங்குள்ள தொழிலாளர்கள் சிலர் சிக்கி இருக்கின்றனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தீயணைப்புத்துறை அதிகாரி ஜெய்ஸ்வால் கூறுகையில், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணிகள் நீடிக்கின்றன. 3 பேர் வரை பலியாகி உள்ளனர். சேத மதிப்பீடு எவ்வளவு என்று தெரியவில்லை. எரிந்த கட்டடத்தில் மேலும் சில உடல்கள் சிக்கி இருக்கலாம் என்று எண்ணுகிறோம் என்றார்.