
லக்னோ, டிச. 17- இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது டி 20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் கட்டாக்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து முலான்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதன் பின்னர் தரம்சாலாவில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 4-வது ஆட்டம் லக்னோவில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். கடந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சு துறையும் சிறப்பாக செயல்பட்டு இருந்தது.


















