
சென்னை: பிப்ரவரி 24-
தங்கம் விலை கடந்த 2 வாரத்திற்கும் மேலாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 21ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,680க்கும், பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 17,440க்கும் விற்பனையானது. இதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.290க்கும், கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் உயர்வையே சந்தித்தது. அதுவும் வார தொடக்க நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,860க்கும், பவுனுக்கு ரூ.1,440 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,18,880க்கும் விற்பனையானது. தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் நேற்று உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையானது.
தொடர்ச்சியாக இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து சவரன் ரூ.1,19,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,890க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.10 குறைந்து ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது.
















