
புதுடெல்லி, மே 27- உலகின் 4-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்திருப்பது சாதாரண விஷயமல்ல என்று தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் நான்காவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.187 டிரில்லியன் டாலர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள பதிவில், “நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஜிடிபி.யில் ஜப்பானை இந்தியா முந்த வேண்டும் என்பது தொலைதூர மற்றும் துணிச்சலான கனவாக இருந்தது. இன்று அந்த மைல்கல் எட்டப்பட்டு விட்டது. இது சாதாரண விஷயம் அல்ல. ஜப்பான் நீண்ட காலமாக மிகப்பெரிய உற்பத்தித் திறன் மற்றும் மீள்தன்மையுடைய பொருளாதாரமாக இருந்து வருகிறது. இன்று நாம் அடைந்திருப்பது, பல்வேறு துறைகள், தலைமுறைகள் மற்றும் பகுதிகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான இந்தியர்களின் லட்சியம் மற்றும் புத்திகூர்மைக்கு சான்றாக விளங்குகிறது. இந்தியாவின் அடுத்த பாய்ச்சல் ஜெர்மனியை முந்துவது மட்டுமின்றி, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.