புதுடெல்லி, டிசம்பர் 27-
முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நாளை நடைபெறுகிறது. முதுமை தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்த அவர், புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். மன்மோகன் சிங் மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் நிறுவன தினம் உட்பட அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளையும் காங்கிரஸ் ரத்து செய்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து டாக்டர் மன்மோகன்சிங்கின் உடல் டெல்லி மோதிலால் நேரு மார்க்கில் உள்ள அவரது இல்லத்துக்கு நள்ளிரவில் கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த தலைவர் மன்மோகன் சிங்கின் இல்லத்துக்குச் சென்று, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதற்கிடையில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, பிரகலாத்ஜோஷி, எச்.டி.குமாரசாமி, நிதின்கட்காரி மற்றும் பிற அமைச்சரவை சகாக்கள் இறுதி தரிசனம் செய்து உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. பிரியங்கா காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் தங்களின் விருப்பத் தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இரண்டு முறை நாட்டின் பிரதமராகப் பதவி வகித்த மன்மோகன் சிங், மக்கள் சார்பான ஆட்சியை அளித்து வெற்றி பெற்றவர். 33 ஆண்டுகள் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991 முதல் 1996 வரை அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பணியாற்றினார்.
முதல்முறையாக தெற்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்தல் களத்தில் இறங்கினார். ஆனால், நாடாளுமன்றத்தை அணுக முடியவில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜ்யசபாவில் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றார். வயதான நோயால் அவதிப்பட்டு வந்த அவர், சக்கர நாற்காலியின் உதவியுடன் நடந்து வந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த அவர், டெல்லியில் மோதிலால் நேரு மார்க்கில் உள்ள அரசு இல்லத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு மாலத்தீவு மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், 92, உடல்நலக் குறைவால், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு அண்டை நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதன் விபரம் பின்வருமாறு:
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர், ஹமீத் கர்சாய் கூறியதாவது: இந்தியா தனது சிறந்த மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. மன்மோகன் சிங் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஒரு அசைக்க முடியாத கூட்டாளியாகவும், நெருங்கிய நண்பராகவும் இருந்தார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கூறியதாவது: மன்மோகன் சிங் காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவர் எனக்கு ஒரு நல்ல தந்தை போல் கருதுகிறேன். மாலத்தீவின் நல்ல நண்பராக இருந்தார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியதாவது: மன்மோகன் சிங் மறைவு இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் துக்கத்தின் தருணம். நமது இருதரப்பு உறவுகளில் மன்மோகன் சிங்கின் பங்களிப்பு அளவிட முடியாதது.
ஒரு பொருளாதார நிபுணராக அவரது நிபுணத்துவம் மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை எப்போதும் முக்கியமானது. எங்களுடைய சிந்தனைகள் மன்மோகன் சிங்யின் குடும்பத்தினருடனும், இந்திய மக்களுடனும் உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நல்ல நண்பர்
அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியதாவது: ஞானம் கொண்ட மனிதர் மன்மோகன் சிங். இவர் எனக்கு ஒரு நல்ல நண்பர். இந்தியாவின் பொருளாதார மாற்றத்தின் தலைமை சிற்பி. 2010ல் நான் இந்தியாவிற்கு அரசு முறை பயணம் சென்ற போது நான் சந்தித்த நல்ல தலைவர்களில் மன்மோகன் சிங் ஒருவர். இவர் தான் இந்தியாவின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியதாவது: மன்மோகன் சிங் மறைவு இந்தியாவுக்கும், உலகத்திற்கும் பெரிய இழப்பாகும். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தையும், உலக நாடுகளுடன் நட்புறவையும் உருவாக்க அவர் செய்த பங்களிப்பு மறக்க முடியாதவை.இந்தியா- அமெரிக்கா கூட்டாண்மையில் மிகச் சிறந்த சாதனையாளராக இருந்தார்.அமெரிக்கா- இந்தியா நட்புறவுக்கான அவரது அர்ப்பணிப்பை நினைவில் கொள்வோம். இரு நாடுகள் இணைந்து சாதித்ததற்கு மன்மோகன் சிங்கின் பணி அடித்தளாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.