பழனி முருகன் கோவிலில் குவிந்த காணிக்கைகள்

திண்டுக்கல், ஏப்ரல் 26- பழனி முருகன் கோவிலில் சித்திரை திருவிழா மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் முருகனை சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கையில் மொத்தமாக 5 கோடியே 42 லட்சத்து 62 ஆயிரத்து 088 ரூபாய் ரொக்கமும், 1131 கிராம் தங்கமும், 21,324 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் பக்தர்கள். தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோவில்கள் இருக்கிறது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதைப் போல அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் அருள் பாலித்து வருகிறார். அந்த வகையில் முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்றது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசனம் செய்கின்றனர்.