பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா – 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

துபாய்: செப். 15- ஆசியக் கோப்பையில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா கலக்கல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றிக்குச் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய காரணமாக இருந்தார். இந்த போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டது எப்படி.. பாகிஸ்தானை காலி செய்ய தன்னிடம் இருந்த சீக்ரெட் என்ன என்பது குறித்த தகவல்களை குல்தீப் யாதவ் பகிர்ந்துள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.! இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற ஆசியக் கோப்பை 2025 போட்டியில் இந்தியா அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் பவுலர்கள், குறிப்பாகச் சுழற்பந்து வீச்சாளர்களே பிரதான காரணமாக இருக்கிறார்கள். இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த போட்டியில் மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்தி பாகிஸ்தான் பேட்டிங் வரிசையை காலி செய்தார். ஆசிய கோப்பை ஐக்கிய அமீரகத்திற்கு எதிரான முதல் லீக் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்தீப், இந்த போட்டியிலும் கலக்கலாக விளையாடினார். நான்கு ஓவர்களில் வெறும் 18 ரன்களை மட்டுமே விட்டுத்தந்த அவர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பாகிஸ்தானை 127 என்ற ஓட்டங்களுக்குக் கட்டுப்படுத்த இதுவே மிகப் பெரியளவில் உதவியாக இருந்தது. இந்தியா இந்த போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார் மனநிலை முக்கியம் நான் முதல் பந்து வீசும்போதே எப்படியாவது விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற மனநிலையில் தான் வீசுவேன். எப்போதும் அப்படி அந்த மனநிலையில் தான் பந்து வீச வேண்டும். களத்தில் புதிய பேட்ஸ்மேன் வந்தாலும் சரி, ஏற்கனவே பல ஓவர்கள் நின்று விளையாடிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, அவர்கள் விக்கெட்டை முதல் பந்திலேயே வீழ்த்துவதே எனது நோக்கம். அதேநேரம் எனது பந்துவீச்சில் இன்னும் கூட நிறைய முன்னேற்றம் தேவை என்று நான் நினைக்கிறேன். சில சமயங்களில் நான் அதிக வேரியேஷன்களை முயல்கிறேன். அதை எப்படி சிறப்பாக கையாள்வது என்பதை நான் மெல்ல கற்றுக்கொள்கிறேன். இது ஒரு பிராசஸ் தான்.. நாளுக்கு நாள் ஒவ்வொரு போட்டியிலும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.