பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது! நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி

பாரீஸ்: செப்டம்பர் 9-
பிரான்ஸ் நாட்டில் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறத் தவறி பிரான்ஸ் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு தனது அரசின் மீது கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவேல் மேக்ரோன் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2024 ஜூன் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அதன்படி தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தில், முதலில் கேப்ரியல் அட்டல் பிரதமராக பதவி வகித்தார். அவர் 2024 செப்டம்பரில் ராஜினாமா செய்த நிலையில், அதன் பிறகு மைக்கேல் பார்னியர் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
s மைக்கேல் பார்னியர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவதாக பிராங்காய்ஸ் பாய்ரு பிரதமராகப் பதவியேற்றார். 9 மாதங்களுக்கு முன் பதவிக்கு வந்த பிராங்காய்ஸ் பாய்ருவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசுக்கு சுமார் 3 ட்ரில்லியன் யூரோக்கள் அளவுக்கு கடன் உள்ளது. அரசை கடனில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டு வருகிறார் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு. அரசின் செலவுகளை சிக்கனமாக மேற்கொள்வது அவசியம் என்ற தன் நிலைப்பாட்டுக்கு ஆதரவு கோரி, நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு அழைப்பு விடுத்தார். பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் மொத்தம் 573 உறுப்பினர்கள் உள்ளனர். அவை கூடியதும், தன் மீது நம்பிக்கை வைத்து அரசுக்கு ஓட்டு அளிக்குமாறு உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதமர் உரை நிகழ்த்தினார் இதுவரை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ஆட்சியில் 4 முறை பிரதமர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இப்போது புதிய பிரதமரை கண்டறிந்து பதவியேற்கச் செய்ய வேண்டிய நெருக்கடி அதிபர் மேக்ரோனுக்கு ஏற்பட்டுள்ளது.