
புதுடெல்லி: டிசம்பர் 3-
கடந்த அக்டோபர் 28-ம் தேதி பிரான்ஸின் பாரிஸ் நகருக்கு செல்ல தமிழ்நாட்டில் இருந்து 3 பேர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தனர்.நவிராஜ் சுப்பிரமணியம், மோகன் காந்தி இளங்கோவன், பிரபாகரன் செந்தில்குமார் ஆகிய மூவரும் விசா சோதனை கவுன்ட்டருக்கு வந்தபோது அவர்களின் ‘டி’ வகை விசா போலியானது எனத் தெரியவந்தது.
இதையடுத்து விமான நிலைய காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் மற்றும் விசா சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில், நவிராஜ் ரூ.6 லட்சம் கொடுத்தும் மற்ற இருவரும் தலா ரு.12 லட்சம் அளித்தும் இந்த விசாக்களை தமிழ்நாட்டின் நாமக்கல்லை சேர்ந்த வி.கண்ணன் என்பவரிடம் இருந்து பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து டெல்லி போலீஸார் கண்ணனை கைது செய்து, டெல்லிக்கு அழைத்து வந்துள்ளனர். விசாரணையில் இதுவரை 16 இளைஞர்களை கண்ணன் ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. இவருக்கு உடந்தையாக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த அப்துல் ஹக்கீம் என்கிற சாதிக் சையத் தலைமறைவாகி விட்டார். இவரை தமிழ்நாடு போலீஸாருடன் இணைந்து டெல்லி போலீஸார் தேடி வருகின்றனர்.
டெல்லி போலீஸாரிடம் கண்ணன் அளித்த தகவல்களின்படி, அவர் பரமத்தியில் அரசு அங்கீகாரம் பெற்ற ஐடிஐ நடத்தி வருகிறார். இத்துடன், வெற்றி ஓவர்சீஸ் என்ற பெயரில் வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனமும் நடத்துகிறார். இவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து, பாரிஸ் நகரின் சர்வதேச பெருநிறுவன கிடங்குகளில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து வந்துள்ளார்.
பல்வேறு நாடுகளுக்கு போலி விசா அளிக்கும் மோசடி டெல்லியில் சமீப நாட்களாக அதிகரித்துள்ளது. இது தொடர்பான தகவலின் பேரில் கடந்த மாதம் டெல்லியில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் 6 மோசடி முகவர்கள் உட்பட 26 பேரை கைது செய்தனர்.

















