பாட்னா, ஆகஸ்ட் 18- பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அங்கு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், அந்த பெயர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.
வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்தம் என்பது, ஏற்கெனவே இருக்கும் வாக்காளர் லிஸ்ட்டை கணக்கில் கொள்ளாமல் புதிய லிஸ்ட்டை உருவாக்குவதுதான். தேர்தல் அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை உறுதி செய்து பட்டியலை தயார் செய்வார்கள். இப்படி செய்ய கொஞ்சம் டைம் எடுக்கும்.
ஆனால் தேர்தலை நெருக்கத்தில் வைத்துக்கொண்டு ஏன் இதை செய்ய வேண்டும்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. இருப்பினும் தேர்தல் ஆணையம் இதை செய்து முடித்தது. முடிவில் கடந்த தேர்தலுக்கும், இந்த தேர்தலுக்கும் இடையில் 65 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டிருக்கிறார்கள் என ஆணையம் அறிவித்தது. அதாவது, புலம் பெயர்ந்தவர்கள், போலி முகவரி, வெவ்வேறு முகவரியில் ஒரே நபர் வசிப்பது, உயிரிழந்தவர்கள் என மொத்தம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டார்கள் என்று ஆணையம் கூறியிருந்தது. ஆனால், இதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. நீக்கப்பட்ட பெயர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியது.














