
பெங்களூர்: ஜூன் 12-
ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து தாமாக முன்வந்து கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்த நிலையில், இன்று சம்பவம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால், அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டிருக்கிறது. எனவே இன்று அறிக்கை தாக்கலாகுமா? என கேள்வி எழுந்திருக்கிறது.
18 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூர் அணி முதன் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தது. இதனை சிறப்பாக கொண்டாடும் விதமாக இரண்டு இடங்களில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒன்று, அம்மாநில சட்டசபையான விதான் சவுதாவிலும், இன்னொரு நிகழ்ச்சி அங்கிருந்து 1 கி.மீ தொலைவில் சின்னசாமி மைதானத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விராட் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்களை பார்க்க, லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்ததால், போலீசார் திணறினர். நிலைமை கையை மீறி சென்றது. நெரிசல் அதிகமாகி, 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இதற்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். மாநில அரசு சார்பில் நிவாரண உதவியும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜூன் 5ம் தேதி, கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) வி.காமேஷ்வர் ராவ், நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் முன்னிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே வழக்கு தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்ததே, ஏன் இன்னும் தாக்கல் செய்யவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மாநில அரசு சார்பில் ஆஜராகியிருந்த அரசு தலைமை வழக்கறிஞர் சஷிகிரன் ஷெட்டி, “உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மைகேல் டி குன்ஹா தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. எனவே விரைவில் அறிக்கை தாக்கலாகும்” என்று கூறினார். ஆனால் இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.
நாங்கள் உத்தரவிட்டும் ஏன் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை? அறிக்கையை கொடுக்க மறுக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இன்று (ஜூன்.12ம்) அறிக்கையை சீல் இடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். எனவே இன்று அறிக்கை தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நீதிபதிகள் 9 கேள்விகளை எழுப்பியிருந்தனர். அதாவது, 1.வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்த யார், எ்பபோது முடிவெடுத்தனர்? எந்த முறையில் முடிவெடுக்கப்பட்டது? 2.போக்குவரத்து ஒழுங்கை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? 3.மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? 4.சம்பவ இடத்தில் ஏதேனும் மருத்துவ வசதி செய்யப்பட்டிருந்ததா? 5.நிகழ்வில் எத்தனை பேர் வரை கலந்துக்கொள்ளலாம் என ஏற்கெனவே மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததா? 6.நெரிசலில் காயமடைந்தோருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டதா? இல்லை எனில் ஏன் கொடுக்கப்படவில்லை? 7.காயமடைந்தவர்கள் எவ்வளவு நேரத்தில் மரத்தவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்? 8.50,000க்கும் அதிகமான மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை ஒழுங்குப்படுத்த ஏதேனும் பொதுவான செயல்பாட்டு வழிமுறை உள்ளதா? 9.நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏதேனும் அனுமதி கோரப்பட்டதா? என கேள்விகளை எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.