புதுடெல்லி: செப் 2-
மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை இணைக்கும் பைரபி – சாய்ரங் வரையிலான 51.38 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி செப்.13-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்களின் மாற்றத்துக்கு இந்திய ரயில்வே குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. இத்தகைய திட்டங்களில் வடகிழக்கு மாநிலமான மிசோரம் தலைநகரை இணைக்கும் பைரபி – சாய்ராங் புதிய பாதை ரயில் திட்டமும் ஒன்றாகும். மிசோரம் மாநிலம் மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளுடனும் திரிபுரா, அஸ்ஸாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுடனும் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இங்கு கடந்த 2014-ம் ஆண்டு வரை அஸ்ஸாம் எல்லையில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவில் உள்ள பைரபிக்கு மட்டுமே ரயில் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் சாலை மார்க்கத்தில் செல்ல பெரும் தொகை செலவிடும் நிலை இருந்து வந்தது. இதையடுத்து, ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையில், ரூ.8,071 கோடியில் 51.38 கிமீ நீளத்தில் ரயில் பாதை அமைப்பதற்கான திட்டம் கடந்த 2008-ல் அறிவிக்கப்பட்டது. முதல்கட்ட பணிகள் நிறைவடைந்து, பிரதான பணிகள் 2014-ல் தொடங்கப்பட்டன. இந்த புதிய ரயில் பாதை, தலைநகர் ஐஸ்வாலை அஸ்ஸாமில் உள்ள சில்சாருடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது.
நாட்டின் வேறு எந்த ரயில் பாதையும் கொண்டிருக்காத வகையில் 48 சுரங்கங்கள், 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள் வழியாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குராங் ஆற்றின் மீது, 371 மீ நீளமும், 114 மீ உயரமும் கொண்ட நாட்டின் இரண்டாவது உயர்ந்த ரயில் பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. இது குதுப் மினாரை விட 42 மீ உயரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீரின் செனாப் பாலமே உலகளவில் முதலாவது உயரமான பாலமாகும்.















