
வியன்னா, ஜூன் 13- ‘அணுசக்தி தொடர்பான தன் பொறுப்புகளை ஈரான் நிறைவேற்றவில்லை, சர்வதேச கட்டுப்பாடுகளை மதிக்கவில்லை’ என, ஐ.ஏ.இ.ஏ., எனப்படும் சர்வதேச அணுசக்தி முகமை குற்றஞ்சாட்டியுள்ளது. அடுத்ததாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு, ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்க பரிந்துரைக்கப்படும் என, கூறப்படுகிறது. மேற்காசிய நாடான ஈரானின் அணுசக்தி திட்டம் என்பது, பல ஆராய்ச்சி தளங்கள், இரண்டு யுரேனியம் சுரங்கங்கள், ஒரு ஆராய்ச்சி அணு உலை மற்றும் மூன்று அறியப்பட்ட யுரேனிய செறிவூட்டல் நிலையங்கள் உள்ளிட்டவை அடங்கியதாகும். அணு ஆயுதப் பரவல் தடை சட்ட உடன்படிக்கையை, 1970ல் ஈரான் ஏற்றது. அதைத் தொடர்ந்து, சர்வதேச அணுசக்தி முகமையின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அணுசக்தி திட்டங்களை செயல்படுத்தி வந்தது.
ஆனால், 1979 ஈரானிய புரட்சிக்குப் பின், அணு ஆயுதங்கள் தயாரிப்பதில் ஈரான் ரகசியமாக ஈடுபட்டது. தன்னிடம் உள்ள யுரேனியம் வளத்தை, அணு ஆயுதத் தயாரிப்புக்கு தேவையான அளவுக்கு செறிவூட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக, சர்வதேச அணுசக்தி முகமை, 2003ல் நேரில் ஆய்வு செய்தது. அப்போது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரண்டு இடங்களை தவிர, மேலும் பல இடங்களில் ஈரான் ரகசியமாக அணுசக்தி திட்டங்களை செயல்படுத்துவது தெரியவந்தது. உரிய விளங்கங்கள் அளிக்கும்படி பலமுறை கூறியும், அதற்கு ஈரான் மசியவில்லை. இந்நிலையில், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகள், ஈரானுக்கு எதிராக, சர்வதேச அணுசக்தி முகமையில் தீர்மானத்தை தாக்கல் செய்தன. ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று கூறின. இது தொடர்பாக, 35 உறுப்பினர்கள் அடங்கிய,
சர்வதேச அணுசக்தி முகமையின், கவர்னர்கள் குழு கூட்டம், ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் வியன்னாவில் நேற்று நடந்தது. அதில், ஈரானுக்கு எதிரான தீர்மானத்துக்கு, 19 பேர் ஆதரவு தெரிவித்தனர். 11 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. இரண்டு நாடுகள் ஓட்டளிக்கவில்லை. அதே நேரத்தில், ரஷ்யா, சீனா, புர்கினோ பாசோ ஆகியவை, தீர்மானத்துக்கு எதிராக ஓட்டளித்தன.