
லீட்ஸ், ஜூன் 18- ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா ஸ்கை ஸ்போர்ட்ஸ் சானலுக்காக முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்குடன் கலந்துரையாடினார்.அப்போது ஜஸ்பிரீத் பும்ரா கூறியதாவது: டெஸ்ட் கேப்டனாக நான் தேர்வு செய்யப்படாததில் எந்த ஆடம்பரமான கதைகளும் இல்லை. நான் நீக்கப்பட்டதாக எந்த சர்ச்சையோ அல்லது தலைப்புச் செய்தியோ இல்லை. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஐபிஎல் தொடரின் போது, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எனது பணிச்சுமை குறித்து பிசிசிஐயிடம் பேசினேன். அறுவை சிகிச்சை நிபுணர், பணிச்சுமைகளை நிர்வகிப்பதில் எந்த அளவுக்கு புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி எப்போதும் என்னிடம் கூறுவார். இதன் பின்னரேநான் கொஞ்சம்புத்திசாலியாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.எனவே நான் பிசிசிஐ-க்கு போன் செய்து, தலைமைப் பொறுப்பில் என்னை பார்க்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். ஏனென்றால் பணிச்சுமை காரணமாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் என்னால் விளையாட முடியாது என்பதால் கேப்டனாக இருக்க முடியாது. பிசிசிஐ என்னை தலைமை பண்பில் அமர்த்த பார்த்தது. ஆனால் அது அணிக்கும் நியாயமற்றது என்பதால் நான் வேண்டாம் என்று சொல்ல வேண்டியிருந்தது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், மூன்று போட்டிகளுக்கு வேறு ஒருவர் தலைமை தாங்குவதும், இரண்டு போட்டிகளுக்கு வேறு ஒருவர் தலைமை தாங்குவதும் அணிக்கு நல்லதாக இருக்காது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென விலக வேண்டிய சூழ்நிலையில் இருக்க நான் விரும்பவில்லை. கேப்டன்சி என்பது நிறைய அர்த்தம் கொண்டது. அதற்காக நான் மிகவும் கடினமாக உழைத்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, சில நேரங்களில் நீங்கள் பெரிய விஷயத்தை கவனிக்க வேண்டும். எனக்கு கேப்டன்சியை விட கிரிக்கெட்டை அதிகம் பிடிக்கும், அதனால் ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு வீரராக இந்திய அணிக்கும் அதிக பங்களிப்பை வழங்க விரும்புகிறேன்.இவ்வாறு ஜஸ்பிரீத் பும்ரா கூறினார்.