போராட்டத்தை ஒடுக்க கூடுதல் படை; அமெரிக்காவில் பதற்றம் அதிகரிப்பு

லாஸ் ஏஞ்சலஸ்:ஜூன் 11 –
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், அதிபர் டொனால்டு டிரம்பின் குடியேற்றச் கொள்கையைக் கண்டித்து நடக்கும் போராட்டம் தீவிரம்அடைந்துள்ள நிலையில், ராணுவத்தின் ‘மரைன்’ பிரிவின் 700 வீரர்கள் மற்றும் 2,000 அதிரடிப்படை போலீசார் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவரை வெளியேற்றும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்.
இதன்
தொடர்ச்சியாக, விசா காலம் முடிந்த பின் தங்கியுள்ளவர்கள் மற்றும் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களில், நாளொன்றுக்கு 3,000 பேரை கைது செய்ய இலக்கு நிர்ணயித்தார்.
இதையடுத்து, அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத் துறையினர் பல்வேறு மாகாணங்களில் அதிரடி சோதனைகள் நடத்தி நுாற்றுக்கணக்கானோரை கைது செய்து வருகின்றனர். அப்படி, கடந்த 7ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பணியிடங்களுக்குள் நுழைந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் தங்கியிருந்தவர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களை உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதை ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த டேவிட் ஹுவேர்ட்டா என்பவர் வீடியோ பதிவு செய்தார். அதற்காக அவர் அதிகாரிகளால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத் துறையினரின் சோதனைகள் மற்றும் கைதுகளுக்கு எதிராக பல்வேறு அமைப்பினர், சங்கத்தினர் போராட்டத்தில் இறங்கினர்.
இந்த போராட்டம் ஒரு சில இடங்களில் வன்முறையானது. கல்வீச்சு, வாகனங்கள் உடைப்பு, தீவைப்பு, சாலை மறியல் போன்ற சம்பவங்கள் நடந்தன.போராட்டத்தை ஒடுக்க அதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில் லாஸ் ஏஞ்சலசில் ஏற்கனவே அதிரடிப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மேலும் 2,000 அதிரடிப் படை போலீசார் மற்றும் ‘மரைன்’ பிரிவின் 700 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளனர்.
தற்போது சட்டம் – ஒழுங்கு மாகாண நிர்வாகம் வசம் உள்ளது. அதிரடிப்படை போலீசார், மாகாணம் மற்றும் மத்திய அரசு இரண்டுக்கும் கட்டுப்பட்டவர்கள்.
இந்நிலையில் ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், மாகாணத்தின் சட்டம் – ஒழுங்கை ராணுவம் கையில் எடுக்குமோ என்ற பதற்றம் நிலவுகிறது.