மகளிருக்கு உரிமைத்தொகை

சென்னை: ஜூன் 12-
விடுபட்ட மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான முதல்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மாநில அளவிலான மணிமேகலை விருதுகளை வழங்கி, 33,312 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 3 லட்சத்து 76,443 பேருக்கு ரூ.3,134.21 கோடி வங்கிக் கடன் வழங்கும் நிகழ்வை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களுக்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட ‘மதி இலச்சினையை‘ வெளியிட்டு, சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட செக்கு கடலை எண்ணெயை மக்கள் பயன்பாட்டுக்கு அறி
முகப்படுத்தினார். தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த 1989-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக, அப்போதைய முதல்வர் கருணாநிதி மகளிர் சுயஉதவிக் குழுக்களைத் தொடங்கிவைத்தார்.
பின்னர், மகளிர் சுயஉதவிக் குழுவினர் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய மணிமேகலை விருதுகளை வழங்கினார்.
மணிமேகலை விருதுகள்: ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில் மணிமேகலை விருதுகள் வழங்கப்படவில்லை. மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும், மணிமேகலை விருதுகளை மீண்டும் வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, மீண்டும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு மணிமேகலை விருதுகள் வழங்கப்படுகின்றன.
மகளிர் முன்னேற்றத்துக்காக ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. எந்த மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும், சிறப்பாகச் செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுவினரை சந்தித்து, அவர்களது குறைகளைக் கேட்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.