மகிமை தரும் கார்த்திகை மாசம்..2 விளக்கை வாசலில் வைப்பது ஏன்?

சென்னை: நவ. 20: கார்த்திகை மாதத்தில் வீட்டில் விளக்கேற்றுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா? இந்த கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்குகளை ஏற்ற சொல்ல என்ன காரணம் தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம். கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வதால் ஏராளமான பலன்கள் குடும்பத்துக்கு வந்து சேரும்.. வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும். வீட்டில் விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். விளக்குகள்: தீபத்தில் முப்பெரும் தேவியரான மகாலட்சுமி, சரஸ்வதி தேவி மற்றும் பார்வதி தேவி ஆகியோர் உறைந்துள்ளதால், தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம், முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒன்றாக பெறலாம். பூஜையறையில் தீபவிளக்கேற்றி வைத்து, இறைவனிடம் மனதார பிரார்த்தனை செய்யும்போது, நீங்கள் கேட்ட அனைத்துமே இந்த கார்த்திகையில் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும். அதுமட்டுமல்ல, இப்படி விளக்கேற்றுவது அக்கினியின் வாயிலாக இறைவனுக்கு நாம் செய்யும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. வரைமுறை: தீபங்களில், இத்தனை தீபங்கள்தான் ஏற்றவேண்டும் என்ற எண்ணிக்கை உண்டு.. அதுவும், ஒவ்வொரு இடத்திற்கும் இத்தனைதான் ஏற்ற வேண்டும் என்கிற வரைமுறையும் உண்டு. குறிப்பாக, கோலமிடப்பட்ட வாசலில் 5 அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும்… திண்ணைகளில் 4 அகல் விளக்குகளும், மாடங்களில் 2 அகல் விளக்குகளும், நிலைப்படியில் 2 அகல் விளக்குகளும், நடையில் 2, முற்றத்தில் 4 அகல் விளக்குகளும் ஏற்ற வேண்டும்.
சூரிய உதயத்திற்கு முன்பாகவே வாசலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். தினமும் அதிகாலை பிரம்ம கூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும். திருமண தடைகள்: அதேபோல, மாலை வேளைகளில் 6 மணிக்கு வீட்டின் வாசலில் 2 மண் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பதால், புண்ணியம் உண்டாகும்… முன் வினைப் பாவம் விலகும் என்பார்கள். கல்வி அபிவிருத்தியாகும். திருமண தடை விலகும். பீடைகள் விலகி, லட்சுமி கடாட்சம் வீடு முழுக்க நிறைந்திருக்கும். ஆனால், இந்த அகல் விளக்குகளை எக்காரணம் கொண்டும் வெறும் தரையில் வைக்கக் கூடாது… கோலமிட்டிருந்தாலும் அதன் மீதும் வைக்கக்கூடாது.. ஒரு சிறிய தட்டின் மீது அல்லது வாழையிலை, அரச இலை, ஆல இலைகளை, அகல்விளக்கு அளவுக்கு வெட்டியெடுத்து, அதன்மீது விளக்கினை வைக்க வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம்.