மதுரையில் முதல்வர் ஸ்டாலின்பிரம்மாண்ட ரோடு ஷோ

மதுரை: மே 31 -தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரையில் 16 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்துகிறார். இதையொட்டி 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை முதல் மேயர் முத்துவின் சிலைத் திறப்பிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முதல்வர் ஸ்டாலினை பாராட்டியிருந்தார். திமுக மாநில பொதுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் நாளை நடைபெறுகிறது. இதற்கான பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதியம் 12 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் மதுரை வருகிறார். அவரை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் தளபதி, மணிமாறன் உள்ளிட்டோர் வரவேற்கிறார்கள். தனியார் ஹோட்டலில் சிறிது தூரம் ஓய்வெடுக்கும்
முதல்வர் ஸ்டாலின், மாலை 5 மணிக்கு ரோடு ஷோ நடத்துகிறார். மதுரை பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை 16.5 கி.மீ. தூரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார். பெருங்குடி, வில்லாபுரம், சோலையழகுபுரம், ஜீவாநகர், டிவிஎஸ் பாலம், பழங்காநத்தம் ரவுண்டானா, பைபாஸ் ரோடு, காளவாசல், குரு தியேட்டர், திண்டுக்கல் ரோடு சந்திப்பு, ஆரப்பாளையம் வரை சாலையோரம் திரண்டிருக்கும் பொதுமக்கள், கட்சியினரை திறந்த வேனில் நின்றபடி முதல்வர் சந்திக்கிறார். இந்த ரோடு ஷோவையொட்டி 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் முதல்வர் வேனை விட்டு இறங்கி, சாலையில் நடந்து சென்று மக்களை சந்திக்கிறார்.