
புதுடில்லி, ஜூன் 11- ‘மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ‘மேட்ச் பிக்சிங்’ செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டும் காங்கிரஸ் எம்.பி., ராகுல், இதுவரை ஏன் முறையாக புகார் அளிக்கவில்லை?’ என தலைமை தேர்தல் கமிஷன் கேள்வி எழுப்பியுள்ளது. மஹாராஷ்டிராவில் 2024 நவம்பரில், 288 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., – ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா – அஜித் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய மஹாயுதி கூட்டணி, 235 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. காங்., – உத்தவ் தாக்கரேயின் சிவசேனா – சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய மஹா விகாஸ் அகாடி கூட்டணி, 50க்கும் குறைவான இடங்களையே கைப்பற்றி, எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறவில்லை. இந்த தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலே, தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறார். இதை, தலைமை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது. இந்நிலையில், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் குறித்து, ‘மேட்ச் பிக்சிங் மஹாராஷ்டிரா’ என்ற பெயரில், ஆங்கில நாளிதழில் ராகுல் கட்டுரை ஒன்றை சமீபத்தில் எழுதி இருந்தார். இதற்கு தலைமை தேர்தல் கமிஷன் தரப்பில் அளித்த விளக்கம்: காங்கிரசும், குறிப்பாக ராகுலும் தேர்தல் கமிஷனைப் பற்றி பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் கமிஷன் உரிய ஆவணங்களை கேட்டு ஆஜராகும்படி கூறினால், அவர்கள் ஒருபோதும் ஆஜராக மாட்டர்.மஹாராஷ்டிரா தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராகுல் குற்றஞ்சாட்டிய நிலையில், இதுபற்றி கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காங்கிரசுக்கு தலைமை தேர்தல் கமிஷன் சார்பில் விளக்கமாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனினும், இந்த விவகாரத்தை ராகுல் சர்ச்சையாக்கி வருகிறார். இது தீவிரமான பிரச்னை என்றால், ராகுல் ஏன் இதுவரை முறையாக எங்களிடம் புகார் அளிக்கவில்லை? தேர்தல் கமிஷனை சந்திக்க ஏன் நேரம் கேட்கவில்லை? இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.