மும்பை, நவ. 21- மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் 65.1 சதவீதம் ஓட்டுப் பதிவு ஆகியுள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்., அடங்கிய, மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள, 288 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஓட்டுப் பதிவுக்குப் பின் வெளியான கணிப்புகளில் பெரும்பாலானவை, மஹாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளன. அதே நேரத்தில், மஹா விகாஸ் கூட்டணி அதிக இடங்களில் வென்று கடும் போட்டியை அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 1995ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, நேற்று அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் 65.1 சதவீதம் ஓட்டுப் பதிவு ஆகியுள்ளது. மாநிலத்தில் உள்ள 36 மாவட்டங்களில், பத்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கோலாப்பூரில் அதிகபட்சமாக 76.25 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது பதிவான 61.39 சதவீத ஓட்டுப்பதிவும், 2019ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 61.4 சதவீத ஓட்டுப்பதிவையும் விட அதிகமாக இருந்தது. 30 ஆண்டுகள் இல்லாத வகையில் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. கருத்துக்கணிப்பு பலிக்காது மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறுகையில், சட்டசபைத் தேர்தலில், மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க உற்சாகம் உள்ளது. பொதுமக்களின் வரவேற்பை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும்.மாநிலத்தில் மகா விகாஸ் அகாடி அரசாங்கம் அமைப்பது உறுதி. கருத்து கணிப்புகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.