
கீவ், ஜூலை 6- நேட்டோ (NATO) உச்சி மாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா இன்று அதிகாலை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. கடந்த சில நாட்களாக ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த தாக்குதலால் ரஷ்யாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கே ரஷ்யாதான் பெட்ரோல் கொடுத்து வந்தது. ஆனால், உக்ரைன் தாக்குதலால் இந்தியாவிடமிருந்து பெட்ரோல் வங்க ரஷ்யா யோசிக்க தொடங்கியது. இப்படி ஒரு நிலைமைக்கு ரஷ்யாவை உக்ரைன் தள்ளியதால்.. புடின் ரொம்பவும் டென்ஷனாக இருந்தார். எனவே சரியான நேரம் பார்த்து காத்திருந்தார். அந்த நேரம் இன்றுதான் வந்திருக்கிறது. அதாவது.. உக்ரைனுக்கு வழங்கப்பட வேண்டிய அடுத்தகட்ட ராணுவ உதவிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ள நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலைநகர் கீவ் முழுவதும் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், ரஷ்யாவின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட உயிர்ச்சேதம் அல்லது சொத்து சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் மாநாட்டின் தொடக்கத்திற்கு முன்னதாக ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பது, உக்ரைனுக்கு உதவும் நேட்டோ நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கிளியர் மெசேஜ் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். உக்ரைன் விமானப்படையின் தகவல்படி, ரஷ்யா இந்தத் தாக்குதலில் பாலிஸ்டிக் ஏவுகணைகள், க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் தற்கொலைப்படை ட்ரோன்களைப் பயன்படுத்தியுள்ளது.




















