மும்பை, செப். 17- மஹாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் மேகவெடிப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் 10 கிராமங்களுக்கு பாதிப்பு நேரிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் கனமழையால் வடமாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட் என பல மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. மஹாராஷ்டிராவிலும் பெய்து வரும் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜல்னா,பீட், நாந்தேட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகமான மழைபொழிவு பதிவாகி உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மழைக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் களம் இறங்கி உள்ளனர். இந்நிலையில், ஜல்கான் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மேக வெடிப்புக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆயுஷ் பிரசாத் கூறி உள்ளார். இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது; ஜல்கான் மற்றும் அதனை ஒட்டிய இடங்களில் மேகவெடிப்பு ஏற்படும் சூழல் காணப்படுகிறது.
கனமழைக காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.கிட்டத்தட்ட 452 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. 2500 ஹெக்டேர் நிலம் சேதம் அடைந்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர்.அவர்களுக்கு உணவு வினியோகிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு ஆயுஷ் பிரசாத் கூறினார். முன்னதாக ஜல்கான் மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களில் பெய்து வரும் கனமழையால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட நீர்வளம், பேரிடர் மேலாண்மை அமைச்சர் கிரிஷ் மகாஜன் சேத மதிப்பீட்டை ஆய்வு செய்தார்.

















