Home செய்திகள் தேசிய செய்திகள் மேற்கு வங்க தேர்தல் இறுதி கட்ட வாக்குப்பதிவில் பயங்கர வன்முறை

மேற்கு வங்க தேர்தல் இறுதி கட்ட வாக்குப்பதிவில் பயங்கர வன்முறை

கொல்கத்தா: ஏப்ரல் 29 –
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சப்ரா, சாந்திபூர், மற்றும் பாங்கர் உள்ளிட்ட பல இடங்களில் வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. முதற்கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலில் காலை முதலே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் இன்றைய தினம் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த வாரம் 152 தொகுதிகளுக்கு முதலாம் கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், இன்றைய தினம் 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று தேர்தல் நடக்கும் பெரும்பாலான தொகுதிகள் திரிணாமுல் கோட்டையாகும். இதனால் இன்று தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இதற்கிடையே வாக்குப்பதிவு தொடங்கி உடனேயே களத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. எண்டலி தொகுதியில் தனது ஏஜென்ட் வெளியேற்றப்பட்டதைக் கண்டு ஆவேசமான பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால், “ஒரு பட்டனை அழுத்துவதற்கு உள்ளே 10 பேர் இருக்கிறார்கள்.. இதை எல்லாம் எப்படி அனுமதிக்கிறீர்கள்” என அதிகாரிகளுடன் மல்லுக்கட்டினார். அதேபோல நாடியா மாவட்டத்தின் சப்ரா தொகுதியில் 53வது வாக்குச்சாவடியில் பாஜக ஏஜென்ட் மொஷாரப் மிர், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. சுமார் 12 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி மற்றும் இரும்பு கம்பிகளுடன் வந்து மொஷாரப் மிர்ரைத் தாக்கியதாகவும், இதனால் தலையில் பலத்த காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக வேட்பாளர் சைகத் சர்க்கார் திரிணாமுல் மீது பழிபோட, திரிணாமுல் காங்கிரஸ் இந்தப் புகாரை அடியோடு மறுத்துள்ளது.
மேஸும், ஹவுரா பகுதியில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வேலை செய்யவில்லை எனப் புகார்கள் வந்துள்ளன. இதற்கிடையே, துணை ராணுவப் படையினர் ஒருவரை இழுத்துச் செல்லும் வீடியோ மற்றும் ஒரு நபரை லத்தியால் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மம்தா மறுபுறம் தேர்தல் களத்தில் நிலவும் வன்முறையைக் கண்டு கொந்தளித்த முதல்வர் மம்தா பானர்ஜி, “மத்திய படைகள் எங்கள் மக்களைக் குறிவைக்கின்றன. இது ஜனநாயகம் அல்ல.. பயங்கரவாதம்..! பாஜக வெளியே இருந்து ஆட்களைக் கொண்டு வந்து இங்கு அராஜகம் செய்கிறது. வாக்காளர்கள் தான் ஓட்டுப் போட வேண்டும், பாதுகாப்புப் படைகள் அல்ல” என மம்தா வெடித்தார். மேலும், வழக்கமாகத் தேர்தல் சமயத்தில் வீட்டிலேயே இருக்கும் மம்தா, இன்றைய தினம் காலை முதலே பவானிபூர் தொகுதியில் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். மத்திய பாதுகாப்புப் படைகள் பாஜகவின் ஏஜெண்டுகளைப் போலச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல இந்தத் தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்- SIR ஒரு மிகப் பெரிய அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது. போலியான மற்றும் இறந்துபோன வாக்காளர்களை நீக்குவதாகக் கூறி, சுமார் 90.8 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பவர்களைத் திட்டமிட்டே தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளதாகத் திரிணாமுல் குற்றம் சாட்டுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் இதனை மறுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்த முதற்கட்டத் தேர்தலில் 92.88 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைத்தது. ஆனால், இரண்டாம் கட்டத் தேர்தலில் ஆங்காங்கே வன்முறை ஏற்பட்டுள்ளது. இதுவரை நிலைமை கையை மீறிச் செல்லும் அளவுக்கு மோசமாகச் செல்லவில்லை என்ற போதிலும், காலை முதலே வெடித்துள்ள இந்த வன்முறை மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.