
தெஹ்ரான்: ஜூன் 24-
இஸ்ரேல் விமானப்படை நேற்று நடத்திய தாக்குதலில் ஈரானின் 6 விமானப்படை தளங்கள், ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஈரான் வீரர்கள் உயிரிழந்தனர். அந்த நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிய நிலையில், ரஷ்யாவிடம் ஈரான் ஆயுத உதவி கேட்டுள்ளது.அமெரிக்க போர் விமானங்கள் நேற்று முன்தினம் ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 அணு சக்தி தளங்கள் மீது சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசின. இதில் 3 அணு சக்தி தளங்களும் முழுமையாக தகர்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து இருக்கிறது.
இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, ரிசோன் லெசியொன், பீர்சேபா, சாபத், ஆஸ்கெலான், ஆஸ்டோட், பெய்சன் உட்பட பல்வேறு நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி வருகிறது. இஸ்ரேலின் பேட் யாம் பகுதியில் இந்திய தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வசிக்கும் கட்டிடங்கள் மீதும் ஈரானின் ஏவுகணைகள் விழுந்தன.அங்கு பணியாற்றும் பிஹாரை சேர்ந்த கட்டிட தொழிலாளி மனோஜ் குமார் கூறும்போது, “சைரன் ஒலி கேட்கும்போது பதுங்கு அறைகளில் தஞ்சமடைவோம். நாங்கள் பணியாற்றும் இடத்துக்கு அருகே ஏவுகணைகள் விழுந்து வெடித்துச் சிதறின. இரவு நேரங்களில் ஏவுகணை தாக்குதல் அதிகமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.தெற்கு இஸ்ரேலில் உள்ள மின் நிலையம் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் மின் நிலையம் முழுமையாக சேதமடைந்து, அந்த பகுதியில் உள்ள பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளன.
50,000 அமெரிக்க வீரர்களை கொல்வோம்: ஈரான் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “இஸ்ரேலின் பல்வேறு நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறோம். குறிப்பாக டெல் அவிவ் மீது தீவிர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தன.
ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி நேற்று கூறும்போது, “இஸ்ரேல் மிகப்பெரிய தவறை இழைத்திருக்கிறது. அந்த நாட்டுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
ஈரான் அரசு ஊடகம் நேற்று வெளியிட்ட செய்தியில், “மத்திய கிழக்கின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்க ராணுவ முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் பணியாற்றும் 50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களை கொன்று குவிப்போம். அவர்களுக்கான சவப்பெட்டிகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்போதே தயார் செய்து வைத்திருக்கலாம்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இஸ்ரேல் விமானப் படை தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 950 பேர் உயிரிழந்துள்ளனர். 3,450 பேர் காயமடைந்துள்ளனர் என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.