வங்கதேசம் வெளியிட்ட புதிய கரன்சியில் முஜிபுர் ரகுமான் படம் நீக்கம்

தாகா, ஜூன் 2- வங்கதேசம் வெளியிட்டுள்ள புதிய கரன்சி நோட்டுகளில் அந்நாட்டின் தேசத் தந்தை முஜிபுர் ரகுமான் படம் நீக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் வழக்கமாக அந்நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரகுமான் படம் இடம் பெற்றிருக்கும். இவரது மகள் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராக கடந்தாண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். வங்கதேச சுதந்திரத்தின் போது உயிரிழந்த ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு மீண்டும் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால், அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். தற்போது அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சி நடைபெறுகிறது. வங்கதேசம் 3 புதிய ரூபாய் நோட்டுகளை நேற்று வெளியிட்டது. அதில் முஜிபுர் ரகுமான் படம் இடம்பெறவில்லை. இது குறித்து வங்கதேச வங்கியின் செய்தி தொடர்பாளர் ஆரிப் உசைன் கான் கூறுகையில், ‘‘ புதிய கரன்சி நோட்டுகளில் எந்த மனித உருவத்தின் படமும் இடம்பெறவில்லை. அவற்றுக்கு பதில் இயற்கை காட்சிகள், வங்கதேசத்தின் பாரம்பரிய அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன’’ என்றார்.வங்கதேசம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடு என்றாலும், அந்நாட்டின் புதிய கரன்சியில் இந்து, புத்தமத கோயில்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க அரண்மனைகளின் படங்கள் இடம் பெற்றுள்ளன. இங்கிலாந்து ஆட்சியில் இருந்துபோது வங்கதேசத்தில் ஏற்பட்ட பஞ்சம் குறித்து மறைந்த ஓவியர் ஜெய்னுல் அபேதின் வரைந்த ஓவியமும் அதில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரபோரில், உயிரிழந்த வங்கதேச தியாகிகள் நினைவிடமும் இடம் பெற்றுள்ளது. வங்கதேசத்தில் புதிய கரன்சி நோட்டுக்கள் வெளியிடபட்டாலும், பழைய கரன்சி நோட்டுக்களும் புழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வங்கதேசத்தின் சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது அரசு தலைமை வழக்கறிஞர் முகமது தஜுல் இஸ்லாம் தாக்கல் செய்ய குற்றச்சாட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் கடந்தாண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட போராட்டத்தை ஒடுக்க முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டார். இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இது மனிதநேயத்துக்கு எதிரான நடவடிக்கை. இந்த குற்றத்தில் வங்கதேசத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுசாமான் கான் கமல் மற்றும் முன்னாள் போலீஸ் ஐ.ஜி சவுத்திரி மாமுன் ஆகியோரும் ஈடுபட்டனர். இது மக்கள் மீது நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல். இந்த உத்தரவை பிறப்பித்ததற்கு பொறுப்பேற்க வேண்டியவர் ஷேக் ஹசீனா. இவ்வாறு ஷேக் ஹசீனா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.