
டாக்கா: டிசம்பர் 12-
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறி, அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
வங்கதேசத்தில் 2026ம் ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்து இருக்கிறது. எனவே, அரசு நிர்வாகத்தை வழிநடத்தி வரும் தற்போதைய இடைக்கால அரசில் பதவி வகிப்பவர்கள் வரும் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால், இடைக்கால அரசியல் பதவியில் இருப்பவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, தன்னை அவமானப்படுத்தியதாகவும், ஓரங்கட்டியதாகவும் வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தான் பதவியில் இருந்து விலகப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; நான் இனி பதவியில் நீடிக்க விரும்பவில்லை. இந்தப் பதவியில் இருந்து வெளியேற நான் ஆர்வமாக இருக்கிறேன். தேர்தல் வரை மட்டுமே இந்தப் பதவியில் நீடிப்பேன். அரசியலமைப்பு மூலம் அமைந்த அதிபர் பதவி என்பதால், தேர்தல் வரை பொறுப்பை வகிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளேன். யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசால் நான் ஓரங்கப்பட்டுள்ளேன். கடந்த 7 மாதங்களாக முகமது யூனுஸ் என்னை சந்திக்கவில்லை. அதிபருக்கான செய்தித் தொடர்புத்துறை நீக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள வங்கதேச தூதரங்கள் மற்றும் துணை தூதரங்களில் வைக்கப்பட்டிருந்த என்னுடைய புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், அதிபர் நீக்கப்பட போகிறாரோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்தது. இதனால், நான் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். இது தொடர்பாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸூக்கு கடிதம் எழுதினேன். ஆனால், எந்த பதிலும் வரவில்லை. என்னுடைய குரலை ஒடுக்கப்பார்க்கிறார்கள், இவ்வாறு அவர் கூறினார்.

















