
புதுடெல்லி: டிசம்பர் 24-
டெல்லி, மும்பை, கொல்கத்தா, குவாஹாட்டி, அகர்தலா, சிலிகுரியில் உள்ள வங்கதேச தூதரகங்கள் முன்பு நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் ஏராளமானோர் திரண்டு, போலீஸ் தடுப்புகளை உடைத்து முன்னேறியதால் பதற்றம் ஏற்பட்டது.
கடந்த 2024-ம் ஆண்டில் வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஹேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவரை ஒப்படைக்க வேண்டுமென்று மத்திய அரசிடம் வங்கதேச இடைக்கால அரசு வலியுறுத்தி வருகிறது. எனினும் ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைப்பது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.
தற்போது வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அந்த நாட்டில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பல்வேறு மாணவர் சங்கங்கள் உருவாக்கிய தேசிய மக்கள் கட்சி,
வங்கதேச தேசிய கட்சி, வங்கதேச ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட பிரதான கட்சிகள் போட்டியிடுகின்றன. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் இன்கிலாப் மஞ்சா என்ற மாணவர் போராட்ட குழுவின் மூத்த தலைவரும், டாக்கா 8 தொகுதியின் வேட்பாளருமான ஷெரீப் உஸ்மான் ஹாடி அண்மையில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டதாக சந்தேகிக்கப்படும் பைசல் கரீம் இந்தியாவில் பதுங்கி இருப்பதாக வங்கதேச சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன.
இதன் காரணமாக வங்கதேசத்தில் வாழும் சிறுபான்மை இந்துக்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 18-ம் தேதி மைமன் சிங் மாவட்டம், பலுகா பகுதியை சேர்ந்த தீபு சந்திர தாஸ் (30) அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இதைக் கண்டித்து இந்தியாவில் செயல்படும் வங்கதேச தூதரகங்கள் முன்பு விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடந்த சில நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் காரணமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, குவாஹாட்டி, அகர்தலா, சிலிகுரி ஆகிய நகரங்களில் உள்ள வங்கதேச தூதரகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.
















