
புதுடில்லி : ஜூன் 3 –
வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழையால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அசாமில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை வெள்ளத்தால் சுமார் 2.64 லட்சம் பேர் வீடு, உடைமைகளை இழந்து உள்ளனர்.
வடகிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அசாமில் 10 பேர், அருணாச்சல பிரதேசத்தில் 9 பேர், மேகாலயாவில் 6 பேர் மிசோரமில் 5 பேர் உட்பட வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய ராணுவம், விமானப் படை, அசாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணிப்பூரில் 19,000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து உள்ளனர். அந்த மாநிலத்தில் சுமார் 5,000 வீடுகள் இடிந்துள்ளன. திரிபுராவில் சுமார் 10,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மிசோரமின் மலைப் பகுதிகளில் 211 நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிசோரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமன்றி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.