
புதுடெல்லி: மே 1 –
மே 1ஆம் தேதி முதல் வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையை, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எரிவாயு விற்பனை நிறுவனங்கள் சுமார் 993 ரூபாய் அளவில் உயர்த்தி நாடு முழுவதும் உள்ள உணவகங்கள், சாலையோர வியாபாரிகளின் தூக்கத்தை கெடுத்துள்ளது. ஆனால் மக்கள் வீடுகளில் பயன்படுத்தும் 14.2 கிலோ சிலிண்டர் விலையை எவ்விதமான மாற்றமும் செய்யாமல் வைத்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் – இஸ்ரேல் இடையேயான மோதல் மூலம் ஹார்முஸ் வழித்தடம் முடங்கியிருக்கும் காரணத்தால் சப்ளை தடைப்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், எரிவாயு விலை உயர்ந்துள்ளது. இன்றைய விலை உயர்வின் மூலம் டெல்லியில் ஒரு வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை இப்போது ரூ.3,071.50 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 2246.50 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை தற்போது 3,237 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
உணவகங்கள், சிறிய ஹோட்டல்கள், டீ கடைகள், பஜ்ஜி – போண்டா கடைகள் மற்றும் சாலையோர உணவகங்கள் என பல தரப்பினருக்கும் இந்த கமர்சியல் எல்பிஜி சிலிண்டர்கள் தான் உயிர் நாடி. இவர்களால் மத்திய அரசு கூறுவது போல் பைப்லைன் கனெக்ஷன் பெற முடியாது என்பதால் எல்பிஜி சிலிண்டர்களை தான் அதிகம் நம்பியுள்ளனர். இவர்களை நம்பி தான் பல கோடி மக்கள் உள்ளனர், வேலைக்கு செல்வோர் முதல் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் வரையில் பலரும் இந்த சிறிய உணவகங்களை நம்பி தான் உள்ளனர். இட்லி கடை முதல் பிரியாணி கடை வரை சிலிண்டர்களில் தான் இயங்கி வருகிறது. ஒரு சிலிண்டருக்கு ரூ.993 விலை உயர்வு என்பது இவர்களின் மாதாந்திர செலவை பெரிய அளவில் அதிகரிக்கும். இது நேரடியாக உணவு பொருட்களின் விலை உயர்வாக மாறி சாமானிய, நடுத்தர மக்களை தான் பாதிக்கும்.
ஏற்கனவே திண்டாட்டம் சிறு உணவகங்கள் ஏற்கனவே சிலிண்டர் விநியோகம் சரிவர இல்லாத காரணத்தால், முழுமையாக இயங்க முடியாமல் குட்டிக்கரணம் அடித்து வருகிறது. பலர் கள்ள சந்தையில் இருந்து தான் சிலிண்டர் வாங்கி வர்த்தகத்தை நடத்தி வருகின்றனர். பிளாக்கில் சிலிண்டர் விலை வாங்கும்போது 2-3 மடங்கு அதிக தொகை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதை வாங்கவில்லை என்றால் உணவங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், முடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். உணவு விலை உயர்வு சிலிண்டர் விலை உயர்வு காரணமாகவே உணவக உரிமையாளர்கள் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள 993 ரூபாய் விலை உயர்வு பெரும் தாக்கத்தை உணவு சந்தையில் ஏற்படுத்தும். இந்த பாதிப்பு உணவகங்கள் மட்டும் அல்லாமல் ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற ஆன்லைன் ஆர்டரிலும் விலை உயர்வு தலைதூக்கும். தற்போது தமிழ்நாட்டில் பல முக்கிய நகரங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாகவே உணவகங்கள் மூடப்பட்டு உள்ளது, முக்கியமாக லாபத்தை ஈட்ட போராடும் கடைகள் பல நாட்களாக பூட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதோடு உணவகங்கள், பேக்கரிகள், டீ கடைகளில் உணவு வகைகள் குறைக்கப்பட்டு உள்ளது. கேஸ் அதிகம் தேவைப்படும் உணவுகள் அனைத்தும் மெனுக்களில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. கேஸ் விலை உயர்வால், உணவு பொருட்கள் விலை உயர்ந்தது மூலம் பல கடைகளில் வர்த்தகம் குறைந்துள்ளது. இதனால் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி, சம்பள குறைப்பு, ஊழியர்களை பணியை விட்டு நீக்குவது போன்ற விஷயங்களும் நடந்து வருகிறது. விறகு, நிலக்கரி அடுப்பு கேஸ் தட்டுப்பாடு காரணமாக பல இடத்தில் விறகு அடுப்பில் சமையல் செய்ய துவங்கியுள்ளனர், பெரிய ஹோட்டல்களில் கூட நிலக்கரி வைத்து சமைக்கும் வழக்கம் துவங்கியுள்ளது. இதனால் விறகு விலையும், நிலக்கரி விலையும் உயர துவங்கியுள்ளது. மிடில் கிளாஸ் மக்கள் இறுதியில் அனைத்தும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை தான் பாதிக்கிறது. குறிப்பாக நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தினர், உணவகங்களை நம்பி இருக்கும் இளம் தலைமுறையினர் இந்த உயர்வின் தாக்கத்தை நேரடியாக எதிர்கொண்டு வருகின்றனர். இது பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் முடிவடைந்த உடனேயே (ஏப்ரல் 29) இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. முன்பு அரசு எல்பிஜி விலையை உயர்த்த மாட்டோம் என்று கூறியிருந்த நிலையில், இப்போது வணிக சிலிண்டர்களுக்கு மட்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் விலையை மறுஆய்வு செய்வது வழக்கம். கடந்த மாதம் (ஏப்ரல்) வீட்டு சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. வணிக சிலிண்டர் விலையும் ஏப்ரலில் ரூ.196 உயர்த்தப்பட்டிருந்தது. இந்தத் தொடர் உயர்வுகள் எல்பிஜி சார்ந்த தொழில்களை நடத்துபவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளன. பிற வர்த்தக பாதிப்பு இந்த விலை உயர்வு சிறு உணவகங்கள் மட்டுமின்றி, திருமண விழாக்கள், பெரிய நிகழ்ச்சிகள், மற்றும் உணவு தயாரிப்பு தொழில்களையும் பாதிக்கும். பல சிறு வியாபாரிகள் ஏற்கெனவே லாபத்தை பெரிய அளவில் இழக்கும் நிலையில் இருப்பதால், இந்த உயர்வு அவர்களின் வியாபாரத்தையே பாதிக்கும் அபாயம் உள்ளது. அரசு இந்த நிலைமையை கருத்தில் கொண்டு வணிக எல்பிஜி மீதான வரியைக் குறைக்கவோ அல்லது ஏதேனும் நிவாரணம் அளிக்கவோ வேண்டும் என்று தொழில் தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். வரும் நாட்களில் இந்த விலை உயர்வின் முழு தாக்கமும் தெளிவாகத் தெரியும்.



















