புதுடெல்லி: ஆக.1-
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் ரூ.2200 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களையும் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைககிறார்.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; வாரணாசியில் சாலை இணைப்பை மேம்படுத்துவதற்காக, பிரதமர் பல முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். மோகன் சராய் – அடல்புரா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வாரணாசி – படோஹி சாலை மற்றும் சித்தௌனி – ஷூல் தங்கேஷ்வர் சாலையின் அகலப்படுத்தல் மற்றும் வலுப்படுத்தல் பணிகள் மற்றும் ஹர்தத்பூரில் ரயில்வே மேம்பாலம் ஆகியவற்றை அவர் திறந்து வைக்கிறார். தல்மண்டி, லஹர்தரா-கோட்வா, கங்காபூர், பாபத்பூர் உள்ளிட்ட பல கிராமப்புற மற்றும் நகர்ப்புற வழித்தடங்களில் விரிவான சாலை விரிவாக்கம் மற்றும் வலுப்படுத்துதலுக்கும், லெவல் கிராசிங் 22சி மற்றும் காலிஸ்பூர் யார்டில் உள்ள ரயில்வே மேம்பாலங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
ஸ்மார்ட் விநியோகத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மற்றும் ரூ.880 கோடிக்கு மேல் மதிப்புள்ள மின்சார உள்கட்டமைப்பை நிலத்தடியில் அமைக்கும் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
சுற்றுலாவுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், 8 ஆற்றங்கரை கச்சா படித்துறைகளின் மறுசீரமைப்பு, காளிகா தாமில் மேம்பாட்டுப் பணிகள், ஷிவ்பூரில் உள்ள ரங்கில்தாஸ் குடியாவில் உள்ள குளம் மற்றும் படித்துறையை அழகுபடுத்துதல் மற்றும் துர்காகுண்டின் மறுசீரமைப்பு மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைக்கிறார். காஞ்சன்பூரில் ஒரு நகர்ப்புற மியாவாகி வனத்தை மேம்படுத்துவதற்கும், ஷாஹீத் உதயன் மற்றும் 21 பிற பூங்காக்களை மறுசீரமைப்பு மற்றும் அழகுபடுத்துவதற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க, ராம்குண்ட், மந்தாகினி, ஷங்குல்தாரா உள்ளிட்ட பல்வேறு குளங்களில் நீர் சுத்திகரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார், அத்துடன் நான்கு மிதக்கும் பூஜை மேடைகள் நிறுவப்படும். கிராமப்புறங்களில் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 47 கிராமப்புற குடிநீர் திட்டங்களையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார். மகாமனா பண்டித மதன் மோகன் மாளவியா புற்றுநோய் மையம் மற்றும் ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மற்றும் சிடி ஸ்கேன் வசதிகள் உள்ளிட்ட மேம்பட்ட மருத்துவ உபகரண நிறுவல்களை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். ஹோமியோபதி கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார். மேலும், அவர் ஒரு விலங்கு கருத்தடை மையத்தையும் அதனுடன் தொடர்புடைய நாய் பராமரிப்பு மையத்தையும் திறந்து வைப்பார்.
















