விமானம் ரத்தானால் இனி வேண்டாம் டென்சன்:கட்டுப்பாட்டை தளர்த்திய மத்திய அரசு

புதுடில்லி, நவ. 21- பயணிகளின் வசதிக்காக டில்லி விமான நிலையத்தில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குளிர்காலங்களில் கடுமையான பனிமூட்டம் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளால் விமான சேவைகள் பாதிக்கப்படுவது வழக்கம். இதுபோன்ற சமயங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கினால், மீண்டும் பாதுகாப்பு சோதனைகளுக்குட்படுத்த வேண்டும் என்பதால், அவர்களை எவ்வளவு நேரமானாலும் விமானங்களிலேயே காக்க வைக்கப்பட்டு வந்தனர். இது பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன்,
விமானப் போக்குவரத்துதுறைக்கு பல்வேறு புகார்களையும் அளித்துள்ளனர். இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாய்டு, அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், பயணிகள் சிரமம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.முடிவில், பனிமூட்டம் அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டால், பயணிகளை விமானத்தில் இறக்கி விட வேண்டும் என்றும், மீண்டும் பயணிகள் விமானத்தில் ஏறும் போது அவர்களை பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் காத்திருக்கும் பகுதியில், விமானத்தின் புறப்பாடு குறித்த தகவலை அறிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி., ஸ்கிரின் பொருத்தப்பட்டு, அப்டேட் செய்ய வேண்டும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், விமானப் பயணிகளின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.