விமான விபத்து பகுதியில் மோடி ஆய்வு

அகமதாபாத்: ஜூன் 13 –
அகமதாபாத் விமான விபத்துப் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 13) காலை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் விமான விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று (ஜூன் 12) குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர்.
தரையில் விழுந்த விமானம், மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். கல்லூரி மாணவர்கள் சிலர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விஷ்வாஸ் குமாரை சந்தித்த பிரதமர் மோடி: இதற்கிடையில், விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் உயிர் பிழைத்த பயணி விஷ்வாஸ் குமாரை பிரதமர் நரேந்திர மோடி சிவில் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விமான விபத்தில் உயிர் பிழைத்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் அளித்தப் பேட்டியில், ‘‘கண்மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. எப்படி உயிர் பிழைத்தேன் என்பது தெரியவில்லை. மீட்பு படை வீரர்கள் என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்’’ என்று கூறியிருந்தார். இவர், டையூ பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர். 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் லண்டனில் வசிக்கிறார். அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். விமானத்தின் 11ஏ இருக்கையில் பயணம் செய்துள்ளார்.
நேற்று விபத்து நடந்த பின்னர், அவர் நடந்து வந்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சற்று பதற்றமான நிலையில் இருந்தாலும், மிக சாதாரண விபத்தில் சிக்கியவரை போல வெகு இயல்பாக அவர் நடந்து செல்வது பதிவாகியிருந்தது. காலில் லேசாக அடிபட்டிருந்ததால், சற்று தாங்கியபடி சென்றார். அவர் நடந்து சென்ற காட்சி, வலைதளங்களில் வைரலானது. விமான விபத்து நடந்த இடத்தையும், மருத்துவமனைக்கும் சென்று காயமடைந்தவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி, “அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து பேரழிவை ஏற்படுத்துகிறது, நாங்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம்” என்று பதிலளித்தார். இதயத்தை உடைக்கும் இந்த இழப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் எங்கள் இரங்கல்கள். அவர்களின் வலியை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,” என்று அவர் சமூக ஊடக  எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். நான் சம்பவ இடத்தைப் பார்வையிட்டேன். நான் மருத்துவமனைக்கும் சென்று காயமடைந்தவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். அழிவின் காட்சியும் மனதை உடைக்கிறது. மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் குழுவினரை நான் சந்தித்தேன். இந்த நினைத்துப் பார்க்க முடியாத துயரத்தில் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் நாங்கள் நிற்கிறோம். துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கல்கள். அவர்களின் குடும்பங்களில் உருவாகும் வெற்றிடத்தின் வலி பல ஆண்டுகள் நீடிக்கும் என்பதை நாம் அறிவோம். “ஓம் சாந்தி, நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம்” என்று பிரதமர் கூறினா.நேற்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விமான விபத்து குறித்து விசாரிக்கும் இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்திற்கு உதவ அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் குழு ஒன்று இந்தியா வருகிறது. இது குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ட்வீட் செய்து, இந்தியாவிற்கு ஒரு விசாரணைக் குழுவை அனுப்புவதாகக் கூறியது. தேவைப்பட்டால் இந்தியாவிற்கு விசாரணை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.