
வாஷிங்டன்: ஜூன் 6 – அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது முதல் முறை பதவிக்காலத்தில் இருந்தே பயணத் தடை கொள்கையை அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில், ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு தற்போது 12 நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளார். அதற்கான பிரகடனத்தில் புதன்கிழமை அதிபர் கையெழுத்திட்டுள்ளார்.
எந்த நாடுகள்? – 12 நாடுகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு முழு நுழைவுத் தடைகளை எதிர்கொள்கின்றன. அவை: ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ குடியரசு, ஈக்வடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் நாடுகளாகும். பகுதி கட்டுப்பாடுகள்: அமெரிக்க அதிபர் உத்தரவுப்படி, புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.