
கொல்கத்தா, ஜூன் 30- மேற்கு வங்க மாநிலம் ஹால்டியாவில் உள்ள பிரபல ஹால்டியா பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த 15 தொழிலாளர்களுக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதிகாலை 4.00 மணி முதல் 4.30 மணி அளவில், ஹால்டியா பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு அருகே உள்ள ரயில் தண்டவாளங்களை ஒட்டியவாறு இருந்த ஒரு குழாயில் தீப்பற்றியுள்ளது. அந்த குழாய் வழியாக கொண்டு செல்லப்பட்ட நாப்தா என்ற வேதிப்பொருள் திடீரென தீப்பற்றி எரிந்ததே இந்த விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. தீயின் சீற்றம் கடுமையாக இருந்ததால் அதன் அருகே பணியில் இருந்த தொழிலாளர்கள் பலரின் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உள்ளூர் மக்கள் மற்றும் தொழிற்சாலை அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு ஹால்டியா மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுள் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


















