புதுடெல்லி: செப்டம்பர் 6-
மும்பையில் 1993-ல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வரை நிழல் உலக தாதாக்களின் பிடியில் அந்நகரம் இருந்தது. இந்த தாதாக்களில் முன்னணியில் இருந்த தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன், ரவி பூஜாரி உள்ளிட்டோருக்கு சவாலாக இருந்தவர் அருண் காவ்லி (76). இவர் தனது ஆதரவாளர்களால் ‘அப்பா’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
இவர் வசித்த மும்பை, பைகுல்லா பகுதியின் தக்டி சாலை இவரது கோட்டையாக இருந்தது. ஓர் எளிய மராத்தி குடும்பத்திலிருந்து உயர்ந்து மும்பை தாதாக்கள் உலகில் கொடிகட்டிப் பறந்த காவ்லியின் வாழ்க்கை திரைப்படக்கதைகள் போல் உள்ளது.மெட்ரிக் படிப்புக்குப் பிறகு சிறு வயதிலேயே காவ்லி குற்ற உலகில் நுழைந்தார். 1980-களில், தனது நண்பர் ராமா நாயக் கும்பலுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அப்போது அவருக்கு தாவூத் இப்ராஹிம் மற்றும் சோட்டா ராஜனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் இருவரும் மும்பை நிழல் உலகில் வளர்ந்து வரும் தாதாக்களாக இருந்தனர்.
தாவூத்தின் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பொறுப்பு காவ்லிக்கு வழங்கப்பட்டது.இந்த நட்பு சிறிது காலம் நீடித்தது, ஆனால் கடந்த 1988-ல் தாதாக்களுக்கு இடையிலான மோதலில் காவ்லியின் நெருங்கிய நண்பர் ராமா நாயக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு தாவூத் இப்ராஹிம் காரணம் என காவ்லி சந்தேகித்தார். இது காவ்லியை மிகவும் காயப்படுத்தியது.தாவூத்தை விட்டுப் பிரிந்த காவ்லி சொந்த கும்பலை உருவாக்கினார். இதனால் காவ்லி – தாவூத் இடையே மோதல் வலுத்தது. இதில் பல துப்பாக்கிச் சூடு மோதல்களில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது

















