200க்கு அதிகமான வீடுகள் இடிந்தது 5 பேர் பலி

திருவனந்தபுரம்: மே 31 -தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கி உள்ளது. கேரளாவின் பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் பலஇடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நேற்றைய தினம் பெய்த கனமழையின் காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர். 13 பேர் மாயமாகி உள்ளனர். 200க்கும் அதிகமான வீடுகள் இடிந்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி உள்ளது. இதனால் வழக்கத்தை விட அதிகமாக பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக கேரளாவின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது
விட்டுவிட்டு அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. நேற்றைய தினமும் கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று ஒரே நாளில் கனமழையின் காரணமாக 5 பேர் பலியாகினர். கோட்டயம் மாவட்டம் கெல்லாட் அருகே வெள்ளத்தில் படகு கவிழ்ந்ததில் கொல்லாட்டை சேர்ந்த ஜோவி (வயது 36), பொலாசிராவை சேர்ந்த அருண் (37) ஆகியோர் இறந்தனர். அதேபோல் விழிஞ்சியம் கடலில் படகு கவிழ்ந்து புலுவிலாவை சேர்ந்த அந்தோணி இறந்தார். இவர்கள் உள்பட மொத்தம் 5 பேர் இறந்துள்ளனர். அதேபோல் கண்ணூர் மாவட்டம் காலிகாவு பகுதியில் அச்சவாடி பரியன்காடு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் மலப்புரத்தை சேர்ந்த அப்துல் பாரி (52)அடித்து செல்லப்பட்டார். மீன்பிடித்து கொண்டிருந்த அவரை வெள்ளம் அடித்து சென்றது. அவரது நிலை என்னவென்று தெரியவில்லை. விழிஞ்சியம் கடலில் படகு கவிழ்ந்ததில் 2 பேர் மாயமாகி உள்ளனர். அதேபோல் திருவனந்தபுரத்தில் 9 மீனவர்கள் மாயமாகி உள்ளனர்.
அதேபோல் இந்த மழையின் காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளது. பாலுசேரியில் ஒரு வீடு, மலப்புரத்தில் 7 வீடு, பாலக்காட்டில் 23 வீடுகள், ஆலப்புழாவில் 19 வீடுகள் சேதமடைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் 144 வீடுகள் சேதமடைந்துள்ளது. மொத்தமாக 216 வீடுகள் சேதமடைந்துள்ளது. வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 1,894 மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் 66 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்றும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு காரணங்கள் கருதி கொல்லம், கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதாக நிஜர்கால், கன்னமாலி, நாயரம்பலம், பெரும்பதபு உள்ளிட்ட பல இடங்களில் கடலில் பெரிய அலைகள் வருகின்றன. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.