500 ரூபாய் நோட்டு ரத்தா? ரிசர்வ் வங்கி விளக்கம்

புதுடெல்லி: ஜூன் 4-
மத்திய அரசு 500 ரூபாய் நோட்டை செல்லாது என அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டை விரைவில் மத்திய அரசு திரும்ப பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் பலரும் ஷாக்காகி உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி முக்கிய விளக்கம் அளித்துள்ளது.
நம் நாட்டில் கடந்த 2016 நவம்பர் 8 ம் தேதி பிரதமர் மோடி திடீரென்று டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் உரையாடினார். நடைமுறையில் இருந்த ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்வதாக அறிவித்தார்.
அதன்பிறகு புதிதாக ரூ.500 கொண்டு வரப்பட்டது. 1000 ரூபாய் நோட்டுக்கு பதில் 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டது. இப்போது 2000 ரூபாய் நோட்ட மக்கள் மத்தியில் புழக்கத்தில் இல்லை. இதற்கிடையே தான் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு விரைவில் 500 ரூபாய் நோட்டை ரத்து செய்ய உள்ளது. நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தணையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே வங்கிகளின் ஏடிஎம்களில் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவலுக்கு முக்கிய காரணம் என்னவென்றால் ரிசர்வ் வங்கி பிறப்பித்த ஒரு உத்தரவு தான். அதாவது மக்களிடம் 100 ரூபாய், 200 ரூபாய் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். இதனால் ஏடிஎம்களில் 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளின் இருப்பை கூட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. இதையடுத்து தான் மத்திய அரசு 500 ரூபாய் நோட்டை தடை செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவ தொடங்கியது.