
செங்கல்பட்டு: பிப்ரவரி 16-
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 வன சரகத்தில் உள்ள காப்பு காடுகளில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட பலவகை பறவைகள் சுமார் 600 கண்டறியப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்ட வனக்கோட்டத்தில் உள்ள 6 வனச்சரகங்களில் உள்ள காப்பு காடுகளில் நிலவாழ் பறவைகள் அதிகம் நடமாடும், 24 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அப்பகுதிகளில் நடப்பு ஆண்டிற்கான நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று நடைபெற்றது.
இதில், வனத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், அரசு சாரா தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், உயிரியலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 144 பேர் பங்கேற்றனர். பைனாகுலர் மற்றும் அதி நவீன கேமராக்கள் மூலம் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது.இந்தக் கணக்கெடுப்பில், ஏசியன் கிரீன் பி ஈட்டர், இன்டியன் ராபின், இன்டியன் பாரடைஸ் பிளைஈட்டர், இன்டியன் நைட் ஜார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பலவகை பறவைகள் சுமார் 600 கண்டறியப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டன.
இந்த பறவைகள் கணக்கெடுப்பு குறித்த விபரங்கள் தொகுக்கப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மாநிலம் முழுவதும் நடந்த இந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி குறித்த விபரங்கள் மொத்தமாக தொகுக்கப்பட்டு,அரசால் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
வனத்துறை பணியாளர் விளக்கம்: சுற்றுச்சூழல் சமநிலையை பேணுதல், பசுமை பரப்பை அதிகரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு பறவைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது குறித்து, நேற்றைய கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு வனத்துறை பணியாளர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிச. 27, 28ம் தேதிகளில், நீர் நிலை பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இரண்டு விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.















