சென்னை: அக்.3-
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இன்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், “தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. தென் தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 1-2° செல்சியஸ் உயர்ந்திருக்கிறது
அக்டோபர் 1ம் தேதி 8:30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 8.30 மணி அளவில் மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில், கோபால்பூரில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 160 கிலோ மீட்டர் தொலைவிலும், கலிங்கபட்டினத்தில் இருந்து கிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்தில் இருந்து கிழக்கு – வட கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், பாராதீப்பில் இருந்து தெற்கு-தென் மேற்கே 280 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது. எனவே தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இன்று வீசக்கூடும்.
அதேபோல் வடக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திரா – ஓடிசா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடமேற்கு – மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா – ஒடிசா – மேற்கு வங்காகடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் வடகிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், குஜராத் கடலோரப் பகுதிகள், ஏனைய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு-மத்திய கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
















