திருவண்ணாமலை: நவ. 14 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு போகிறீர்களா? நாளை ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகத்தையொட்டி இன்று தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை அந்த கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும் ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று சிவனுக்கு விசேஷம். அன்றைய தினம் அன்னாபிஷேகம் செய்யப்படும். மாதந்தோறும் பவுர்ணமி அன்று பால் , தேன், தயிர், இளநீர், சந்தனம், வில்வம் , பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்படும். ஆனால் இந்த ஐப்பசி மாத பவுர்ணமி அன்று மட்டும் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அன்னாபிஷேகத்தை கண் குளிர பார்த்தவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பார்கள். அது போல் கோடி சிவலிங்கங்களை பார்த்த புண்ணியமும் கிடைக்கும். இந்த ஆண்டு ஐப்பசி அன்னாபிஷேகம் நாளை நவம்பர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த நாளுடன் ஐப்பசி மாதம் முடிந்து அடுத்தது கார்த்திகை மாதம் தொடங்குகிறது. நாளை அதிகாலை 3.53 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 3.42 மணி வரை பவுர்ணமி திதி உள்ளது. இந்த பவுர்ணமி தினத்தன்று அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரங்களும் இணைந்து வருகிறது.அதன்படி அண்ணாமலையார் கோயிலிலும் அன்னாபிஷேக விழா வரும் இன்று தொடங்குகிறது. நாளை பவுர்ணமி என்பதாலும் அன்னாபிஷேகம் என்பதாலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் பக்தர்கள் தரிசனத்திற்காக கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதில் ஒன்று தரிசன நேரத்திலும் தரிசன வரிசையிலும் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் வழக்கம் போல் செயல்படும். 3ஆம் பிரகாரத்தில் தரிசன வரிசையை அனுமதிப்பதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நேரமும் குறையும். அன்னாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி இன்று மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. மாலை 6 மணிக்கு மேல் வழக்கம் போல் தரிசனம் செய்யலாம்.