வக்பு பெயரில் நில அபகரிப்பை தடுக்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஷோபா

கொச்சி, நவ.15-
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முனம்பம் புறநகர் பகுதியில் சுமார் 600 குடும்பத்தினருக்கு சொந்தமான 404 ஏக்கர் நிலத்துக்கு வக்பு வாரியம் உரிமை கோருவதாகக் கூறப்படுகிறது. இதைக்கண்டித்து அந்த நிலத்தின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே முனம்பம் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை சந்தித்தபின் கூறியதாவது: வக்பு நிலம் என்ற பெயரில் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நிலத்தைப் பறிக்க நில மாபியாக்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு வரையில் முனம்பம் பகுதி மக்களுக்கு சொந்தமாக இருந்த நிலத்துக்கு வக்பு வாரியம் உரிமை கோருகிறது. கர்நாடகாவில் மட்டும் சுமார் 29 ஆயிரம் ஏக்கர் நிலத்தை முஸ்லிம் தலைவர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து வக்பு சட்டத் திருத்த மசோதா பற்றி ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.