ஸ்டாலினுடன் மோடி பேச்சு

சென்னை: டிச. 3: தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார்.
இது குறித்து “தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். பிரதமரிடம் ஏற்கெனவே எழுதிய கடிதத்தை குறிப்பிட்டு தமிழ்நாட்டின் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினேன். பிரதமர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, “ஃபெஞ்சல் புயலால், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்கள் இதுவரை கண்டிராத அளவுக்கு பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. இதனால் ஒன்றரை கோடி பேர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 11 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சாலைகள், பாலங்கள் என ஏராளமான முக்கிய கட்டுமானங்கள், உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இந்த மிகப் பெரிய பாதிப்பைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு, தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடியாக முதற்கட்டமாக, 2,000 கோடி ரூபாய் அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்க வேண்டும்.” என்று முதல்வர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் தொலைபேசி வாயிலாக என்னை தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி – புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்தியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை பிரதமர் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் கனமழையின் காரணமாக பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்ததில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம், வ.உ.சி. நகர் 11-வது தெருவில் வசித்து வந்த .ராஜ்குமார் என்பவரது வீட்டின் மீது 01-12-2024 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் கனமழையின் காரணமாக மரம் விழுந்ததை அறிந்து அவர் வீட்டின் கதவினை திறக்க முற்பட்டபோது மலையிலிருந்து பெரிய பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்ததில் அவரது வீடு மண் மற்றும் பாறையால் மூடப்பட்டு இடிந்துள்ளது. இதனையறிந்து மாவட்ட நிர்வாகத்தினரால் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்படையின் கமாண்டர் உட்பட 39 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று 02-12-2024 மாலை 6.30 மணியளவில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் முயற்சிகள் பலனளிக்காமல் துரதிஷ்டவசமாக அந்த வீட்டின் உள்ளே இருந்த ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா (வயது 27), மகன் கௌதம் (வயது-9), மகள் இனியா (வயது-5), பக்கத்து வீட்டில் வசித்து வரும் சரவணன் என்பவரின் மகள் ரம்யா (வயது-7) மஞ்சுநாதன் என்பவரின் மகள் விநோதினி (வயது-14) மற்றும் சுரேஷ் என்பவரின் மகள் மகா (வயது-7) ஆகிய ஏழு நபர்கள் மண்ணுக்கடியில் சிக்கி உயிரிழந்தனர். இந்தத் துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.