எடப்பாடி செயலால் கொதித்த புள்ளி

சென்னை: ஏப்ரல் 24 –
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு கட்சி எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைத்த நிலையில், “நாடே அழுதுகொண்டிருக்கும் நேரத்தில் விருந்து தேவையா?” என முன்னாள் அதிமுக பிரமுகர் மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்து வைத்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்த விருந்து நடைபெற்றது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு பிரிந்த அதிமுக – பாஜக கூட்டணி தற்போது மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. அதிமுகவும் பாஜகவும் இணைந்து, 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் அறிவித்தார். 2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், பாஜக உடன் கூட்டணி என்றும், கூட்டணி ஆட்சி இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்தது சலசலப்புகளை ஏற்படுத்தியது. அதிமுக கூட்டணியிலிருந்து முதல் கட்சியாக எஸ்.டி.பி.ஐ வெளியேறியுள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் அதிமுக நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் விலகி வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு இரவு விருந்து அளித்துள்ளார். பாஜக கூட்டணியால் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்யவே இந்த விருந்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.